Monday, November 3, 2014

இந்த வாழ்க்கை

பல்லவி

இந்த வாழ்க்கை
இனி போதும் போதும் எனக்கு
இப்படியே இருந்தால்
இனிப்பேதும் இல்லை நமக்கு



சரணம் 1

உயிருக்குள் ஒழிந்திருப்பதை விட
உனக்குள் ஒழிந்திருக்க பிரியப் படுகிறேன்
மனசுக்குள் காதலிப்பதை விட - உன்
மார்புக்குள் புதைந்திருக்க ஆவல் கொள்கிறேன்

காலைகள் தோறும் மறக்காமல்
காதல் செய்தி அனுப்ப எரிச்சல் படுகிறேன்
காலை மாலை எப்போதும் உன்
கைகளுக்குள் சிக்கியிருக்க எண்ணிக்கொள்கிறேன்



சரணம் 2

எப்போதாவது சந்திக்கும் வாழ்க்கை
எப்போதுமே இனி வேண்டாம் என்கிறேன்
தப்பாது உன்னிடமிருந்து தினம்
காதல்பாடம் கற்க கனவு காண்கிறேன்

நட்போடு உறவாடி என்னுடன் பழகும்
நண்பனாக நீ இருக்கவே ஆசைகொள்கிறேன்
சிறு தப்பேதும் நான் செய்தால் கூட
சிரித்தபடி ரசிக்கும் உனக்கே என்னைத் தருகிறேன்

சவுகரியம் வருமென்றால்

பல்லவி

சவுகரியம் வருமென்றால்
சாதாரணமாய் வந்திடாதே
சந்தர்ப்பம் அமைத்துக்கொள்
சட்டென்று தளர்ந்நிடாதே



சரணம் 1

பலமான மரம்தானே
பலகையாய் மாறுகிறது
வளமான எதிர்காலம்
உன் முன்னே தான் போகிறது

குடிசையில் வாழ்ந்நதவன்தான்
மாளிகையை தேடுகிறான்
நம்பிக்கை உள்ளவன்தான்
துணிவோடு ஓடுகிறான்

தங்கத்த சுட்டாலும்
அந்த சிங்கத்த சுட்டாலும்
மதிப்பென்னும் குறையாதே



சரணம் 2

கவலையின் கைப்பிடித்து
முன்னோக்கி நடைபோடு
தோல்வியைத் தோளோடு
அணைத்தபடி விளையாடு

வெற்றியின் உச்சத்தை
வெறுங் கனவு காணாதே
வலிகளைக் காணாமல்
வளம் வந்து சேராதே

தங்கத்த சுட்டாலும்
அந்த சிங்கத்த சுட்டாலும்
மதிப்பென்னும் குறையாதே

மருந்தெல்லாம் இனிக்குதடி

பல்லவி

மருந்தெல்லாம் இனிக்குதடி
மாம்பழமோ கசக்குதடி
நேராக நடக்கையிலும்
நெஞ்செல்லாம் பதறுதடி

குளிரிலும் தினம் குளிக்கிறேன்டி
இருமுறை பல் துலக்குறேன்டி
மாருதமே உனைப் பார்க்க
மல்லிகையாய் இருக்கிறேன்டி



சரணம் 1

மாதுளங்காய் பல்லழகே
மயக்கிடும் உன் சொல் அழகே
நெஞ்சோடு; சாஞ்சிருடி
எழுதித் தரேன் இவ்வுலகை

பச்சத் தண்ணியப் போல்
என்னையே நீ பருகேன்
மச்சானே உனக்காக
மருதங்கிளி நானிருக்கேன்


சரணம் 2

வாசமான புகையிலையே
சரசமிடும் பூங்குயிலே
வெடக்கோழி; நான் வாரேன்
வேறெங்கும் நான் போகேன்

நல்லா தான் சொல்லுறடா
பேச்சாலே கொல்லுறேடா
இன்னும் நான் இருந்தாக்கா
இம்சைதான் பண்ணுவடா

இந்த தேசம் நம் தேசம்

பல்லவி

இந்த தேசம் நம் தேசம்
இலங்கை என்னும் புகழ் தேசம்

இந்த தேசம் நம் தேசம்
இலங்கை என்னும் புகழ் தேசம்



சரணம் 1

முப்பதாண்டு போர்க் காலம்
முடிவில் எதனைத் தந்தது
எதிர்கால கனவு கலைத்து
பெரிய சேதம் தந்தது

உயிர்களின் மதிப்பு இன்னதென
உணர்வோமே பேதமின்றி
தீக் குணங்கள் அழியட்டும்
இனி மிச்ச மீதமின்றி



சரணம் 2

குண்டுகள் வெடித்து சிதறியதில்
குற்றுயிர் எத்தனை மடிந்தது
சாதி மதம் பார்த்ததினால்
சாதனை என்ன நிகழ்ந்தது

ஒருதாய் வயிற்றுப் பிள்ளையென
ஒற்றுமையாய் வாழ்ந்திருப்போம்
உலகத்தை நம் உறவாக்கி
உயர்ச்சி பெற ஒன்றிணைவோம்

எப்போது என் வெறுமையை

பல்லவி

எப்போது என் வெறுமையை
தீர்க்கப் போகிறாய்..
ஏன் என் பொறுமையை
இன்னும் சோதிக்கிறாய்?



சரணம் 1

ஆண்

நான் பூக்களோடு
சிநேகமான செய்தி அறிவாயா?
உன் தோள்களோடு
சாய்ந்து வாழும் நாட்கள் தருவாயா?

என் பார்வையோடு
நீங்கிடாமல் நாளும் இருப்பாயா?
என் காதலோடு
கைகள் கோர்த்து கீதம் இசைப்பாயா?



சரணம் 2

பெண்;:

என் காதல் தாகம்
தீர்ந்து போகும் நாட்கள் வர வேண்டும்
என் பாதி பாகம்
நீயே ஆகும் வரங்கள் தர வேண்டும்

உன் கண்கள் தீட்டும்
ஓவியங்கள் உன் அன்பைக் கூறும்
நீ மாலை சூட்டும்
நாளில் தானே ஏக்கங்கள் தீரும்

தேன் ஊறும் உன் கன்னம்

பல்லவி

ஆண் 

 தேன் ஊறும் உன் கன்னம்
தென்பட்டால் என் உள்ளம்
களவாக உனைத் தேடும் மானே...

பெண்;:

 பொல்லாத உன் கைகள்
வில்லாக தினம் மாறி
அம்பாக எனைத் தாக்கும் ஆணே

இருவர்

நாணம் என்ற கோட்டையை நாம் உடைக்கலாமா?
குளத்துக்குள்ள எறங்கி தினம் மீன் புடிக்கலாமா?



சரணம் 1

ஆண்

உன் தேகக் குழலை எடுத்து
நானும் ஊதவா
அத்துவானக் காட்டுக்குள்ள
வேட்டையாடவா

பெண் 

பட்டப் பகல் நேரமிது
புத்தி இல்லையா
வெட்டவெளி இருக்குதையா
ரொம்பத்  தொல்லையா

ஆண்

என் புத்திக்குள்ள போதையத்தான்
ஏத்தி விடுறியே

பெண் 

என் வெட்கம் என்ற பாதையத்தான்
மாத்தி விடுறியே



சரணம் 2

ஆண் 

 சாமக்கோழி கூவும் போதும்
பிச்சுத் தின்னுறேன்
கரண்ட் அடிக்கும்; எடத்தயெல்லாம்
கணக்கு பண்ணுறேன்

பெண்

உன் பார்வை வந்து மோதும்போது
குழந்தை ஆகிறேன்
நீ போர்வை கொண்டு மூடும்போது
தொலைந்து போகிறேன்

ஆண்

குடிச்ச பின்னும் தாகம் இன்னும்
தீரவில்லையே

பெண்

தீரும் வரை குடிச்சிக்கலாம்
சோர்வு இல்லையே

பொல்லாத காதல் என்னை

பல்லவி

பொல்லாத காதல் என்னை
போர் செய்து கொல்லும்
நில்லாத காற்று எந்தன்
வாழ்க்கையைச் சொல்லும்

ஒரு கல் போலவே என் தலைமீதிலே
அது பாரங்கள் தந்து என்னை வதைக்கிறதே


சரணம் 1

பூமழை தூவும் ராத்திரி நேரம்
உன் முகம் தோன்றும் கண்ணில்
அது என்றும் அகலாதிருந்து
என்னை கீறிச் செல்லும்
நாளெல்லாம் நினைவில் வந்து
துயர் வாரிக் கொல்லும்

நீ தந்த காதல் எனக்கு
காயங்கள் கூட்டும்
என் கண்ணீர் தானே இனிமேல்
தாகங்கள் தீர்க்கும்


சரணம் 2

காரணம் இன்றி காதலை கொன்ற
கண்மணி நீயும் எங்கே
உனைத் தேடி நாட்கள் எல்லாம்
அலைந்தேனே இங்கே
பசி தாகம் பிணியைக் கூட
மறந்தேனே அன்பே

வெண்ணீரை ஊற்றும் வலிகள்
காட்டிட வேண்டாம்
கண்ணீரைப் பரிசாய் நீயும்
கேட்டிட வேண்டாம்

தரணியில் நான் சிறப்பாய் வாழ்ந்திட

பல்லவி

தரணியில் நான் சிறப்பாய் வாழ்ந்திட
காரணம் நீங்கள் தந்தையே..
மரண வலி நான் கொடுத்த போதும்
மகிழ்வுடன் பெற்றாயே என் தாயே!

இன்று நான் ஆகிவிட்டேன்
வாழ்க்கையைக் கற்ற பெண்ணாக
இனிமேல் நானிருப்பேன்
உங்களின் இரு கண்ணாக

ஆராரிரோ பாடினீர்கள்..
என் சந்தோசத்தை மட்டுமே நாடினீர்கள்



சரணம் 1

சிறு பிள்ளையாய் நானிருக்கையிலே
பெரும் மகிழ்வுடனே கொஞ்சினீர்கள்..
பருவ வயதடைந்ததும் என்வாழ்வு
திசைமாறாதிருக்க அஞ்சினீர்கள்

நல்ல நண்பர்கள் யாரென்பதை
அறிவுரையாகக் கூறினீர்கள்..
எதிர்காலம் சிறப்பாக அமைய
கல்வியை இதயத்தில் கீறினீர்கள்

தம்பிக்கும் தங்கைக்கும் இதையே
நம்பிக்கை விதையாக தூவினீர்கள்

சரணம் 1

கருவறை சுகந்தம் தரும் நிம்மதி
வாழ்க்கையில் இனிமேல் கிடைக்காது
என் முன்னேற்றத்தின் விடிவெள்ளிகளை
பார்ப்பேன் மனதை உடைக்காது

பறவையின் சிறகாக மாறி நானும்
தாய் தந்தையரை காப்பேனே
கடவுளிடம் கையேந்தியே நான்
கருணை காட்டும்படி கேட்பேனே

என் இறைவா என்றும் - என்
அன்னை தந்தைக்கு அருள்புரிவாய்!

Friday, October 31, 2014

உன்னைப் பார்க்க ஓடி வந்தேன்

பல்லவி

உன்னைப் பார்க்க ஓடி வந்தேன்
உயிரே என்று தேடி நின்றேன்
நீ போன பின் என்னை மறந்து
உருமாறி வாடி நின்றேன்



சரணம் 1

பெண்

வார்த்தையால் என் பாசத்தை
சொல்லத் தெரியவில்லை
இதுவரை உன்னைப் போல்
எவரும் கொல்லவில்லை

விழிகளில் அம்பு வைத்து
வீசியே வலிகள் தந்தாய்
வழியிலே எனைப் பார்த்தால்
பூக்களை பரிசாய் தந்தாய்



சரணம் 2

ஆண்

கண்களில் காந்தம் வைத்து
என்னை நீ திருடிக்கொண்டாய்
மென்விரல் கொண்டெந்தன்
கன்னங்கள் வருடிச் சென்றாய்

தென்றலின் ஈரம் போல
பேச்சாலே சுகங்கள் தந்தாய்
நாளைக்கு என்ன பேசலாமென
பாடங்கள் பயிலச் செய்தாய்

Wednesday, October 29, 2014

மார்புக்குள் ஒரு குடிசை செய்து

பல்லவி

மார்புக்குள் ஒரு குடிசை செய்து
மயிலே உன்னுடன் வாழ்கிறேன்
கண்ணுக்குள் ஒரு சோலை செய்து
கண்மணியே உன்னை ஆள்கிறேன்



சரணம் 1

ஆண்

காதல் வழியும் கண்களைக் கொண்டு
கவிஞனாய் என்னை ஆக்கிவிட்டாய்
கனவாய் இருந்த எந்தன் திசையில்
கலங்கரை விளக்காய் ஆகிவிட்டாய்

பூமொழி கொண்டு வார்த்தைகள் செய்து
பூவே என்னிடம் பேசி விட்டாய்
எங்கோ அலைந்து தவித்திருந்த எனக்கு
நேச வலையினை வீசி விட்டாய்


சரணம் 2

பெண்

எந்தன் பார்வையில் உந்தன் பூமுகம்
என்றும் படிந்திட ஆசையடா
என்னைத் தாண்டி நீ செல்கையிலே
எனக்குள் காதலின் ஓசையடா

என் விழியோரம் பெருகும் நீர்த்துளி
உன்னை எண்ணியே விழுகிறது
நீயும் நானும் ஒன்றாய்ச் சேர
இருதயம் பலமுறை தொழுகிறது!

நிம்மதியான இந்த நிமிடங்களை

பல்லவி

நிம்மதியான இந்த நிமிடங்களை
நித்தமும் எனக்குத் தருவாயா?
நிலவொளி வீச என் வானில்
நிஜமாய் தினமும் வருவாயா?



சரணம் 1

பெண்

ஆண் புயலாக அருகில் வருகிறாய்
தேன் துளிபோல சிரிக்கிறாய்
பாடலைப் போல மனதில் பதிகிறாய்
ராகங்கள் எனக்குள் இசைக்கிறாய்

நட்சத்திரமாய் இரவினில் வந்து
நித்திரை எல்லாம் திருடுகிறாய்
நாளிகை முழுதும் என்னுடனிருந்து
தென்றல் காற்றாய் வருடுகிறாய்




சரணம் 2

ஆண்

இப்படி நானே இருந்ததே இல்லை
இயல்பை எல்லாம் மாற்றினாய்
எப்படி நுழைந்து உள்ளத்துக்குள்
இன்பத் தேனை ஊற்றினாய்?

நெடுநாள் தொடர்ந்த கவலை எல்லாம்
நெருப்பாய் மாற்றி அணைத்தாயே
எனக்கென பூத்த அன்புச் செடியே
என்னை உனக்கள் இணைத்தாயே

அன்பை எல்லாம்

பல்லவி

அன்பை எல்லாம்
மறைத்து வைத்தாய் மொத்தமாக
நேற்று அதை
உரத்துச் சொன்னாய் முத்தமாக!


சரணம் 1

பெண்

நீ என்னைக் காதலிக்கிறாய்
நான் உனக்காய் காத்திருக்கிறேன்
நீ என்னைக் காண வருகையில்
நான் புதிதாய் பூத்திருக்கிறேன்

உறக்கம் தின்ற என் தலைவா
உனக்குள்ளே நான் இருந்திடவா?
எல்லா நிமிடமும் கரைகிறதே
எனக்குள்ளே நீ இருந்திட வா!



சரணம் 2

ஆண்

நீ என்னை வாசிக்கிறாய்
நான் உன்னை சுவாசிக்கிறேன்
நீ என்னைக் களவாடினாய்
நான் உனக்குள் மொழியாகினேன்

உன் தோளில் தலை சாய்கிறேன்
காதல் காய்ச்சலால் காய்கிறேன்
தொடும் தூரம் நீ இருந்தாலும்
தொடாமல் நிலவாய் தேய்கிறேன்

Tuesday, October 28, 2014

மழையில் நனைந்த சிறு புறாவாய்

பல்லவி

மழையில் நனைந்த சிறு புறாவாய்
மனசில் அன்று பரபரப்பு
காலை நேர இளம் வெயிலாய்
எனக்குள் இன்று கதகதப்பு

நீயிருக்கிறாய் என்
நினைவுகளின் ஓரமடி
கண் தூக்கம் மறந்து
கடந்தன பல வாரமடி



சரணம் 1

உன்னோடு இருக்கும் நிமிடங்கள்
சுவர்க்க வாசனை தருகிறது
நீ மறைந்தால் கண்ணைவிட்டு
இதயம் இரண்டாய் உடைகிறது

ரகசியக் கனவுகளில் எல்லாம்
உன்னை வைத்து பூட்டுகிறேன்
நீயே எந்தன் சுவாசம் என
எல்லோரிடமும் காட்டுகிறேன்



சரணம் 2

பெண் நிலவே நீதான்
எந்தன் வாழ்வின் ஆதாரமாய்
நீயற்ற கணம் எல்லாமே
ஆகுது இங்கே சேதாரமாய்

அன்பு நிறைந்த இதயக் குளத்தில்
பூத்தாயே வெண் தாமரையாய்
நட்சத்திர வானத்திலே நீ
ஒளி வீசும் பிறை நிலவாய்

இதயம் இப்படி வலிக்கவில்லை

பல்லவி

இதயம் இப்படி வலிக்கவில்லை
இதுவரை எதையும் ஒழிக்கவில்லை
உன்னைக் கண்ட முதல்நாள் தொடக்கம்
தனிமையை தனியாய் கழிக்கவில்லை

உறக்கம் முன்போல் இனிக்கவில்லை
உண்ணவும் பருகவும் பிடிக்கவில்லை
உன்னைக் கண்ட முதல்நாள் தொடக்கம்
உயிரும் மனசும் எனக்கு இல்லை!



சரணம் 1

கனவும் தெரியல நிஜமும் தெரியல
காலையும் மாலையும் உன் நினைப்பு
இரவும் தெரியல பகலும் தெரியல
இருதய இயக்கத்தில் இரு துடிப்பு

உந்தன் ஞாபகத் தீயில் நானும்
சுகமாய் இங்கே குளிர் காய்வேன்
களங்கமற்ற உன் சிரிப்பொலியால்
சுவாசிக்கும்போது சுகம் பெறுவேன்

உன் கண் அசைவில் ஒரு மின்மினி
உயிரோவியமாய் எனக்குள்ளே நீ


சரணம் 2

ஒரு திசை பார்த்து தனித்திருந்தேனே
ஓரப் பார்வையில் எனை மறித்தாய்
உன் விழி அசைவில் நான் தொலைந்தேனே
எந்தன் உயிரில் பூ பறித்தாய்

நீ வரும் அந்த ஒற்றை நொடியில்
மனதில் தோன்றும் புது வசந்தம்
என்னைப் பார்த்து நீ சிரிப்புதிர்த்தால்
இதயத்தில் வீசும் புது சுகந்தம்

பொழுதெல்லாம் உன்னால் பூஞ்சோலை
சுகமாப் புலரும் இனி அதிகாலை

Sunday, October 26, 2014

ஓராயிரம் பூக்கள்

பல்லவி

ஓராயிரம் பூக்கள்
ஒன்றாக மலரும் மலரும்
ஒவ்வொரு இரவும்
காலையில் புலரும் புலரும்



சரணம் 1

பெண்

என் மனவெளியில் ஆனந்தமில்லை
என் இதயத்தில் பேரின்பமில்லை
உன் கண்களில் காதல்களில்லை
உன் நெஞ்சில் ஈரங்களில்லை

ஆண்

செல்லக்கிளியே என்னை மாற்றிடு
உள்ளம் தெளிய தலை கோதிடு
எனை எனக்கு பறைசாற்றிடு
வீணையாக்கி தினம் மீட்டிடு



சரணம் 2

ஆண்

தீயவற்றை நான்; தாண்டினேன்
திருந்திய பின் உனை பார்க்கிறேன்
அன்புக் கணவனாய் நான் மாறுவேன்
அன்பே உனக்கு சேய் ஆகுவேன்

பெண்

நெஞ்சில் பொங்கும் ஆனந்தமே
இனி எனக்கு பேரின்பமே
நீயே எந்தன் ஆகாயமே
நீங்கும் எந்தன் துயர் யாவுமே!

வாழ வைப்பது எங்களை

பல்லவி

வாழ வைப்பது எங்களை
என்ன என்று சொல்லுங்க
தெரியலன்னா கொஞ்சம் ஒதுங்கி
அங்கே போயி நில்லுங்க



சரணம் 1

பால் வாசம் மாறாத பச்சக் கொழந்த
பண வாசம் உணர்ந்துகிட்டு எழும்பிடுதுங்க..
பாடம் படிக்க போகின்ற சின்னதுங்களும்
பணத்த கேட்டு அடம் புடிச்சி அழுவுதுங்க..

எங்கே போயி பணம் எடுப்பேன்
எப்படி நான் பணம் கொடுப்பேன்?



சரணம் 2

ஊருக்காரன் உறவுக்காரன் ஒன்னா வருவான்
ஊட்டுக்குள்ளே படுத்துகிடந்து உசுர எடுப்பான்
மாற்றுக்காசு வாங்றதுக்கே வழியில்லாதப்ப
வேறு தேவை பலதை சொல்லி கரச்சல் கொடுப்பான்

எங்கே போயி பணம் எடுப்பேன்
எப்படி நான் பணம் கொடுப்பேன்?

சங்கிலியாய் என்னுள்ளே

பல்லவி

சங்கிலியாய் என்னுள்ளே
நீளுகின்ற நினைவு
சந்தோஷம் யாவையும்
நீக்கிவிடும் நிகழ்வு

தொடர்ந்திடும் சோதனைகள்
சோர்வினைக் கூட்டும்
உள்ளத்தின் வலிமைகள்
உடைந்தென்னை வாட்டும்


சரணம் 1

வெறுங் கண்ணீர் வடிக்காது
வேதனையுடன் நானிருந்தேன்
வெடித்து மனம் வலித்தபோது
அழுது நான் துடித்திருந்தேன்

மாருதத்தின் சுகந்தத்தில்
மயங்கிடத்தான் காத்திருந்தேன்
சூறாவளி வருமென்று
கனவிலா பார்த்திருந்தேன்?


சரணம் 2

அடுத்து வரும் நாட்களிலே
இந்த துன்பங்கள் நீங்கிடுமா?
எப்போதும் எனை மட்டும்
வதைத்ததிங்கே வாட்டிடுமா?

மொட்டவிழும் மகிழ்வெல்லாம்
உடனடியாய் கருகிடுமா?
என் நெஞ்சம் கரைந்திங்கு
கண்ணீரும் பெருகிடுமா?

உயிருக்குள் நீ பாதி

பல்லவி

உயிருக்குள் நீ பாதி
உணர்வினிலே நீ மீதி

மாஞ்சோலை மனசுக்குள்
மழை போல விழுந்தவளே..
சொல்லாக இருந்தென்னுள்
கவிதையாய் எழுந்தவளே..


சரணம் 1

ஆண்  

  கதை பேசும் கரு விழிக்குள்
சுகமாக உறங்கிடவா?
ரோஜாப் பூ உதட்டுக்கு
மெதுமெதுவாய் இறங்கிடவா?

பெண்  

  என் அருகே வரும் உன்னை
மிக மெதுவாய் தள்ளிடவா?
பின் இருந்து எனை அணைக்கும்
உனை நானும் கிள்ளிடவா?



சரணம் 2

ஆண்

  பால் கோப்பை மனசுக்குள்
பழத் துண்டாய் விழுந்தாயே..
நெஞ்சென்ற வயலுக்குள்
நெற் கதிராய் முளைத்தாயே!

பெண்  

  நந்தவனச் சோலைக்குள்
நறுமலராய் பூத்தாயே..
நான் உந்தன் சேய் போல
நாளெல்லாம் காத்தாயே!

Friday, October 24, 2014

கிளை விரித்த உன் நெஞ்சில்

பல்லவி

கிளை விரித்த உன் நெஞ்சில்
கிளி போல நானிருப்பேன்

மலைத் தேனைப் போல் உந்தன்
மனசுக்குள் இனித்திடுவேன்


சரணம் 1

ஒத்தை பன மரம்போல
ஒதுங்கியே நான் நிக்கையிலே
வித்தை போல நெஞ்சுக்குள்
விருப்பமாக நுழைந்தாயே

 உச்சி முதல் பாதம் வரை
உன் நெனப்பில் மிதக்கையிலே
 நச்சி வச்ச இஞ்சியப் போல்
 நறுமணத்தை தந்தாயே


சரணம் 2

உன் விழிக்குள் மீன் போல
உலவிய படி இருப்பேனே
கண் விழிக்கும் நேரத்திலும்
கவிதைகள் படிப்பேனே

நீ தின்ற கரும்பையும்
நிஜமாகவே ருசிப்பேனே
ஏன் இந்த அவஸ்தை என
எனை எண்ணியே சிரிப்பேனே!

அன்பை அள்ளிப் பொழியும்

பல்லவி

அன்பை அள்ளிப் பொழியும்
இதயம் நிறைந்த அல்லாஹ்வே
நீ வகுத்த வழிவகையில்
வாழ்வேனே என் வாழ்வை!

சரணம் 1

காடு மலை நதிகளை
கண்குளிர்ச்சியாய் தந்தாயே
சுகந்தரும் தென்றலை
சுவாசிக்க வைத்தாயே...

வெண் பகலை இரவுக்குள்
வேறாக்கி வைத்தாயே
நீரினிலும் நிலத்தினிலும்
உயிர்களைப் படைத்தாயே

சரணம் 2

சமூகங்கள் திருந்திவிட
நபிகளாரைத் தந்தாயே..
தூய நபி நாயகத்தின்
உம்மத்தாயெமை வைத்தாயே

மறுமையில் எமக்காக
சுவனத்தைத் தருவாயே..
சுவனத்தை அடைவதற்கு
நற்குணங்கள் தருவாயே!

வாலிபத் தென்றலாய் வந்து

பல்லவி

வாலிபத் தென்றலாய் வந்து
வசியம் செய்தவனே..
மனதை பறித்துப்போட்டு
மகிழ்ச்சி தந்தவனே..

உணர்வுகளில் புகுந்து
உறக்கம் தின்றவளே..
முத்தங்கள் தந்து என்
மூச்சைக் கொன்றவளே..


சரணம் 1

என் மன ஓசையை
மொழிபெயர்த்துப் பார்த்தாயா?
கண்களின் பாசையை
கவிதைகளில் சேர்த்தாயா?

தனியான நேரத்தில்
எனை எண்ணிப் பார்த்தாயா?
கனவில் நான் வந்ததால்
உடலெல்லாம் வேர்த்தாயா?


சரணம் 2

உயிருக்குள் உறவாடி
உள்ளத்தை கொய்தவனே..
மாந்தோப்பின் தூறலாய்
மனசெல்லாம் பெய்தவனே..

காதலின் அழகெல்லாம்
கலர்கலராய் தந்தவளே
புன்னகையின்; மொழியினை
பூக்களுக்கே சொன்னவளே..

Saturday, September 27, 2014

இன்பங்கள் பொங்கும்

பல்லவி

இன்பங்கள் பொங்கும்
இரு பெருநாளிலே....
தியாகத்தை அறிந்தோம் - ஹஜ்
திருநாளிலே!

இறை ஆணையை நிறைவேற்றிய
இப்றாஹீமே – அவர்
திருமகனாய் வந்துதித்த
இஸ்மாயிலே! (ஐஐ)

சரணம் 1

பாலைவன பூமியிலே – உம்
பாதம் பட்ட சோலையிலே
காலை மாலை வேளையிலே
ஹஜ் கடமை செய்வர் ஹாஜிகளே

உழ்ஹிய்யா வழக்கம் தந்த
வரலாறு இது..

தியாகத்தின் மகிமை சொன்ன
நன்னாள் இது..

பொன் நாள் இது (II)


சரணம் 2

இப்றாஹீமின் கனவினிலே
இஸ்மாயிலை பலியிடவே
துணிந்தார் மறுதினமே
வஹி இறங்கியது அக்கணமே

புதல்வரை அன்புடன் நீர்
விடுதலை செய்வீர்..

சுவனத்து ஆடு இதோ
ஏற்றுக்கொள்வீர்..

குர்பான் கொடுப்பீர் (II)

மக்காவில் பிறந்த மாணிக்கமே

பல்லவி

மக்காவில் பிறந்த
மாணிக்கமே எம் நபியே..
சொர்க்கத்துக் கனியே
சோபிதரே மஹ்மூதே..

துயர் போக்க பாரில்
தோன்றிய எம் ரசூலே..
உயிர் போன்ற இஸ்லாத்தை
உலகுக்கு தந்தவரே..

(மக்காவில்)

சரணம் 1

பிஞ்சு மனசிலும் நஞ்சை ஊற்றி
சொல்லால் நபிகளை வதைத்தனரே
தூதரின் மனதை உடைப்பதற்காக
வஞ்சனை வார்த்தையை கதைத்தனரே

முன்னோர் சொன்னதை முழுவதுமாக
முஹம்மத் மறுப்பதாய் பழித்தனரே
முகமன் சொல்லி சிரித்தால்கூட
முகத்தை குறைஷியர் சுழித்தனரே

(மக்காவில்)


சரணம் 2

அறியாமையின் இருளைப் போக்க
அண்ணல் நபியே நினைத்தீரே..
இரு பாலாரும் அல்லாஹ்வை வணங்க
இரு கரம் ஏந்தி துதித்தீரே..

தொல்லைகள் செய்த மக்களைக் கூட
தூயவர் நபியே மதித்தீரே..
நன்மை செய்தால் சுவர்க்கம் உண்டென
மக்கள் மனதில் பதித்தீரே..
                                                                             

(மக்காவில்)

Wednesday, January 15, 2014

ஆண் என்றால் என்ன

பல்லவி

ஆண் என்றால் என்ன
பெண் என்றால் என்ன
தொழிலொன்று கிடைக்கும் வரை
தயக்கங்கள் தீராது

படிப்பு உண்டு கையிலே
துணிவு உண்டு நெஞ்சிலே
பார் போற்ற போராடு
பசி தாகம் பாராது

சரணம் 1

பணமிருந்தால் பையினிலே
பயமில்லை வாழ்க்கையிலே
குணம் மட்டும் இருந்தாலோ
அது என்றும் குப்பையிலே

சொந்தக் காலில் நிற்பதற்கு
சொந்தங்கள் தேவையில்லை
முயற்சியினால் முன்னேறு
தூண்டுகோல் வேறு இல்லை

சரணம் 2

நல்ல காலம் வருமென்றால்
தானாக வந்திடாது
நம்பிக்கை விதை போட்டு
வாழ வேண்டும் துணிவோடு

உனை நம்பும் சொந்தங்கள்
உலகினிலே சிறப்பாக
தோள் நிமிர்ந்து வாழ்வதற்கு
தொழில் பெற்று முன்னேறு!

விருப்பங்கள் இல்லையெனில்

பல்லவி

விருப்பங்கள் இல்லையெனில்
விதி வென்று விடுமா?
விரும்பிய வாழ்க்கையினை
அது கொன்று விடுமா?

சரணம் 1

ஆணுக்கும் பெண்ணுக்கும்
ஆரம்பம் திருமண ஊற்று
வாழும் காலம் முடியும் வரை
வருடணும் வசந்த காற்று

உயிர் இரண்டும் இணையனும்
உண்மை அன்பை ஏற்று
மனதுக்குள் வளரணும்
நம்பிக்கை எனும் நாற்று

சரணம் 2

நடப்பதென்ன நாளுமிங்கே
நடைபழக்கும் விளையாட்டு
இஷ்டம்தான் இல்லையென்றாலும்
கஷ்டம் தருகிற கூத்து

காதலினை மறக்கச் சொல்லும்
காதல் புரிந்தவர் கூற்று
ஆதலினால் மாறிவிட்டேன்
அன்னை தெரேசாவை ஏற்று!!

எரிமலையின் கொடுமைகளை

பல்லவி

எரிமலையின் கொடுமைகளை
என் இதயம் தாங்கிடுமா?
புயல்காற்றின் தாலாட்டில்
என் மனது தூங்கிடுமா?

சரணம் 1

காணாத கனவுகள்
கண் முன்னே நிழலாக
விரும்பாத வாழ்வொன்றை
விதி தந்ததே நிஜமாக

எழுதாத கவிதைகள்
ஏட்டினிலே வரியாக
பாடாத பாடல்கள்
காற்றினிலே மொழியாக

சரணம் 2

இதயம் பற்றி எரிகிறதே
இயலாமைகள் வதைக்கிறதே
கலகங்கள் எனக்குள்ளே
கல்லறைகள் அமைக்கிறதே

பாழான தலையெழுத்து
வாழ்க்கை தனை கவிழ்க்கிறதே
வாளாகி என் மனசை
வதைத்து தினம் துலைக்கிறதே

பாதைகள் புதிது

பல்லவி

பாதைகள் புதிது
பயணங்கள் புதிது
பணக்காரப் பயலுக்கு
பசி கூட புதிது

வறுமைகள் கொடிது
வடிவங்கள் கொடிது
வறியவருக்கெல்லாம்
வயிறும்தான் கொடிது

சரணம்

இறைவனின் சந்நிதானத்தில்
இழிபுள்ளியா இந்த ஜீவன்கள்
எங்கே போய் அழிப்பது
ஏழைகள் என்ற நாமங்கள்

வீதி தனையே வீடு செய்து
வியக்க வைக்கும் கோலங்கள்
கடினப்பட்ட வாழ்க்கையினை
கடனாய் கொடுத்த காலங்கள்

(பாதைகள் புதிது)




(பாடலுக்கான சூழ்நிலை – வீதியோரங்களில் வாழும் ஏழைகளுக்காக எழுதப்பட்டது)

வானவில்லின் நிறங்கள்

பல்லவி

வானவில்லின் நிறங்கள் என்ன
கறுப்பா?
காணவில்லை என் மேல் இன்னும்;
வெறுப்பா?

சரணம் 1

காதல் என்ற நோய் எந்தன்
கண்ணை மறைத்துக் கொண்டது
பாசம் நேசம் யாவையும்
பாதி வழியில் கொன்றது

பாடம் படிக்கும் போதினிலும்
பயித்தியங்கள் பிடித்தது
ஓடம் போல உள்ளமும்
ஓய்வில்லாமல் துடித்தது

இது காலம் தந்த காயமா
எல்லாம் இங்கே மாயமா

(வானவில்லின்)

சரணம் 2

கணவன் கொடுமை என்றேதும்
கலவரங்கள் இல்லைத்தான்
ஆன போதும் தாய் வதனம்
அகலவில்லை இன்னும்தான்

எந்தன் வயிற்றில் பூத்த மலர்
ஏதும் செய்தி அறிகையில்
உள்ளதை எப்படி மறைப்பேனோ
உண்மையை எப்படி உரைப்பேனோ

இது காலம் தந்த காயமா
எல்லாம் இங்கே மாயமா

(வானவில்லின்)


(பாடலுக்கான சூழ்நிலை – வீட்டைவிட்டு தனது காதலனுடன் ஓடிப்போன ஒரு பெண் சில வருடங்கள் கழித்து தான் செய்த தவறை எண்ணியழும்போது)

வானம் உடைந்து



வானம் உடைந்து

பல்லவி

வானம் உடைந்து
மண்ணில் வீழக் கூடுமோ?
கானம் பாடும்
குயிலின் குரல்தான் மாறுமோ?

சரணம் 1

காதல் செய்த காலங்கள்
கண்ணில் மீண்டும் தோன்றுதே
இனிமேல் அவைகள் வருமாவென
இதயம் இங்கே வாடுதே

வாழ்ந்த இன்ப வருடங்களில்
வாழ்க்கை சுவையாய் இருந்ததே
எதிரே உள்ள எதிர்காலம்
என்னை பயங்கள் காட்டுதே

(வானம் உடைந்து)

சரணம் 2

இரண்டு மலர்களைத் தந்துவிட்டு
இறைவன் உன்னை அழைத்தானோ
இனிமேல் உன்னை எண்ணியழ
இவளின் விதியைப் படைத்தானோ?

அயலார், வீட்டார், சொந்தங்கள்
அகிலம் எனக்காய் இருந்தாலும்
உந்தன் இடம்தான் நிறைந்திடுமா
உயிரின் பூமுகம் மறைந்திடுமா?

(வானம் உடைந்து)


(பாடலுக்கான சூழ்நிலை – திருமணம் செய்து
ஐந்தே வருடங்களுக்குள் நோயின் காரணமாக
கணவன் இறந்து விடுகின்றான். கணவனை இழந்த மனைவி, இரண்டு குழந்தைகளுடன் அல்லல்படும்போது அவளது வேதனையின் வெளிப்பாடு)

உயிர் கொண்ட பெண்மைக்கு

பல்லவி

உயிர் கொண்ட பெண்மைக்கு
உயர்வான பதவி தந்தாய்
துயர் போக்கும் அருமருந்தாய்
துணையாய் என்னருகில் நின்றாய் (2)

சரணம் 1

இந்த பூமி இதமாக
இத்தனை நாள் இருந்ததடா
எந்த ஜீவன் இனி எனக்கு
உறுதுணையாய் இருக்குமடா

திருமணத்துக்காய் பூத்திருக்கும்
என்னுடைய பெண் பூவே
திலகமிட்டு சுமங்கலியாய்
திறமையுடன் வாழ் மகளே

(உயிர் கொண்ட)

சரணம் 2

ஈரைந்து மாதங்கள்
சென்றதும் நீ அறிவாய்
தாய் என்ற சொல்லுக்கு
பெருமை தனை நீ உணர்வாய்

கொண்டவனின் மனமறிந்து
கோலமிடு பைங்கிளியே
உன் தாயினி நானில்லை
உன் அத்தை உணர் நிலவே

(உயிர் கொண்ட)


(பாடலுக்கான சூழ்நிலை – தனது ஒரே மகள் திருமணம் முடித்து போகையில் ஒரு தாயின் எண்ணம்)

மாங்குருவி

பல்லவி

மாங்குருவி போல் வந்து
மார்பில் கூடு செய்தவளே
பூ அருவி சலசலப்பாய்
பூங்காற்றை தந்தவளே

விண்மீனை திருடிக்கொண்டு
விண்ணிடமே மறைத்தவனே
பெண் பூவை திருடிடவே
சம்மதங்கள் கேட்டவனே

சரணம் 1

காதோரம் உன் சிணுங்கள்
கவிதைகள் பலதை படித்துத் தரும்
அந்நேரம் என் இதயம்
ஆயிரம் தடைவை துடித்து விடும்

கண் ரெண்டில் ஓவியமாய்
கண்ணா உந்தன் சிரிப்பிருக்கு
மண் மீது நான் பிறந்தேன்
அதிலும் ஏதோ சிறப்பிருக்கு

            (மாங்குருவி)

சரணம் 1

விழி ரெண்டில் உனை இருத்த
விழிகள் உன்னை படம் பிடிக்கும்
எந்நாளும் உனைக் காண
என்னிடம் மனது அடம் பிடிக்கும்

தப்பேதும் நீ செய்தால்
தண்டனை என்ன தந்திடனும்?
இதழ் கொண்டு முத்தமிடு
இன்பங்கள் அதனால் பொங்கிடனும்

            (மாங்குருவி)


(பாடலுக்கான சூழ்நிலை – தலைவனும் தலைவியும் காதல் கொள்ளும்போது)

தொழில்நுட்ப யுகத்தினிலே



பல்லவி

தொழில்நுட்ப யுகத்தினிலே
தொழில் தேடும் போதினிலே
எதிர்காலம் உனக்காக காத்திடுமா?

கற்கின்ற பருவத்திலே
கற்காமல் நீ இருந்தால்
வருங்காலம் கனிவாக பார்த்திடுமா?


சரணம் 1

உலகில் வாழ்வது மிக கஷ்டம்
உணராவிட்டால் பெரும் நஷ்டம்
உதயம் காண கல்விதனை
கற்க புறப்படுவாய்!...

வாழ்க்கை என்பது பாதி வனம்
வாழாவிட்டால் பாலைவனம்
வாழ்ந்து காட்டி பின்நாளில்
உலகத்தை வென்றிடுவாய்!

எதிர்காலம் இனிய கீதம் பாடும்
எழில் கொண்ட வாழ்வு வந்து சேரும்!


சரணம் 2

காதல் வைரஸ் வரும் பருவம்
கவிதை எழுதும் ஞானம் வரும்
தோழா கொஞ்சம் நீ அசந்தால்
தோல்வி தேடி வரும்!

அனைத்தும் பயில மனமிருந்தால்
அகிலம் உனக்கு ஏணி தரும்
அறிவால் வெல்லும் பலமிருந்தால்
அரிவாள் நாணி விடும்!

எதிர்காலம் இனிய கீதம் பாடும்
எழில் கொண்ட வாழ்வு வந்து சேரும்!

(பாடலுக்கான சூழ்நிலை – மாணவர்களுக்கான அறிவுரை)

பொன்மாலைப் பொழுதொன்றில்

பல்லவி

ஆண் -  

    பொன்மாலைப் பொழுதொன்றில்
    பொற வந்து நின்னது போல்
    ஏ புள்ள ஓ வதனம்
    என் நெஞ்சில் பதிஞ்சிடுச்சி...

பெண் -  
 
    கண்ஜாட கவி கொண்டு
    கட்டி என்ன போட்டுபுட்ட
    ஏ இதயம் புறாக்குஞ்சாய்
    ஓ கண்ணில் அடஞ்சிடுச்சி!

(பொன்மாலை)


சரணம் 1

ஆண்  

    பாசம் வச்ச நெஞ்சுக்குழி
    ஒன் நெனப்பால் நெறஞ்சிடுச்சி
    குளிர்கால எண்ணெய் போல்
    ஏ உள்ளம் ஒறஞ்சிடுச்சி!

பெண்  

    பனியான ஓ சிரிப்பில்
    பாதி மனம் கரஞ்சிடுச்சி
    ஓ பார்வை பட்டதுமே
    ஏ உசிரு சிலிர்த்திடுச்சி

(பொன்மாலை)


சரணம் 2

ஆண்

    அடியே நீ கொன்னுபுட்ட
    தீ விழியால் தின்னுபுட்ட
    மடிமீது தல வச்சால்
    மயங்காம தள்ளிப்புட்ட

பெண்

    ஏதேதோ செய்துபுட்ட
    என்னழகை கொய்துபுட்ட
    மார்கழியில் மாலை தந்து
    மதிமயங்கச் செய்துபுட்ட

(பொன்மாலை)


(பாடலுக்கான சூழ்நிலை –  தலைவனும் தலைவியும் காதல் கொள்ளும்போது)

ஓ மேகமே ஓ மேகமே

பல்லவி

ஓ மேகமே ஓ மேகமே
கார் கூந்தல் பெண்ணவளைக் கண்டாயா?
என் நெஞ்சமே என் நெஞ்சமே
பார்ப்பவளை உன்னவளாய்க் கொண்டாயா?


(ஓ மேகமே)


சரணம் 1

ஆண் -   

    பூவையின் மனதில் பூகம்பம் - அது
    பூவைக்கு நான் தந்த காயங்கள்

    பாவையின் கண்களின் கண்ணீரோ
    பாவி என் சொல் வடித்த சாயங்கள்

    என்னாச்சு ஏ வார்த்தை கொன்னாச்சு...
    ஏதாச்சு அவ நெஞ்சு புண்ணாச்சு..

    அறியாமல் செய்தது!

(ஓ மேகமே)


சரணம் 2

பெண் -   

   சொற்கள் மனசை துளையிட்டு
    எந்தன் உள்ளம் துண்டாச்சு..

    கற்கள் பட்ட வாழை போல்
    கவலை வலிகள் ரெண்டாச்சு..

    ஆணென்று உன் திமிரு சொன்னாச்சு..
    பெண் தானே என் வலிமை நின்னாச்சு..

    கண்ணீரும் கூடுது!

(ஓ மேகமே)


(பாடலுக்கான சூழ்நிலை – ஆண் தனது
காதலியை சந்தேகப்பட்டு கன்னாபின்னாவென்று திட்டுகிறான். பிறகு அவளில் பிழை இல்லை
என்று உணர்ந்த பின்பு இப்படிப் பாடுகின்றான்)