Wednesday, January 15, 2014

வானம் உடைந்து



வானம் உடைந்து

பல்லவி

வானம் உடைந்து
மண்ணில் வீழக் கூடுமோ?
கானம் பாடும்
குயிலின் குரல்தான் மாறுமோ?

சரணம் 1

காதல் செய்த காலங்கள்
கண்ணில் மீண்டும் தோன்றுதே
இனிமேல் அவைகள் வருமாவென
இதயம் இங்கே வாடுதே

வாழ்ந்த இன்ப வருடங்களில்
வாழ்க்கை சுவையாய் இருந்ததே
எதிரே உள்ள எதிர்காலம்
என்னை பயங்கள் காட்டுதே

(வானம் உடைந்து)

சரணம் 2

இரண்டு மலர்களைத் தந்துவிட்டு
இறைவன் உன்னை அழைத்தானோ
இனிமேல் உன்னை எண்ணியழ
இவளின் விதியைப் படைத்தானோ?

அயலார், வீட்டார், சொந்தங்கள்
அகிலம் எனக்காய் இருந்தாலும்
உந்தன் இடம்தான் நிறைந்திடுமா
உயிரின் பூமுகம் மறைந்திடுமா?

(வானம் உடைந்து)


(பாடலுக்கான சூழ்நிலை – திருமணம் செய்து
ஐந்தே வருடங்களுக்குள் நோயின் காரணமாக
கணவன் இறந்து விடுகின்றான். கணவனை இழந்த மனைவி, இரண்டு குழந்தைகளுடன் அல்லல்படும்போது அவளது வேதனையின் வெளிப்பாடு)

No comments:

Post a Comment